வீட்டை
நன்றாக கழுவி விட்டிருந்திறார்கள். வாசலில் தேங்கிய
தண்ணீரில் ரோஜா ப்பூக்கள் மிதந்து
கொண்டிருந்தது. உள்ளே நுழையும் போதே
செல்லச்சாமி மாமா துண்டை எடுத்து
தந்தார்.
“தொவட்டிட்டு
ஈர துணிய எல்லாம் வெளியவே
விட்டுட்டு வா”
அத்தனை
பேரும் விக்கித்து போயிருந்தபோது அவர் தான் எல்லாத்தையும்
எடுத்து செய்தார். உள்ளே அம்மாவின் பேச்சு
குரல் கேட்டது. என் கண்கள் சுதாவை
தான் தேடின. அறை கதவை
திறந்தேன். ஒரு ஓரமாய் கசங்கிய
துணி போல் கிடந்தாள் சுதா.
+++
நானும்
சுதாவும் முதல் முதலில் சந்தித்து
கொண்டது ஒரு கோயிலில். ஜாதகம்
குடும்பம் எல்லாம் ஒத்து போய்
தான் பார்த்து கொண்டோம். பார்த்தவுடனே எனக்கு சுதாவை பிடித்து
விட்டது. முதல் சந்திப்பிலயே நிறைய
பேசினாள். வரப்போகும் மனைவி பற்றி யாதொரும்
எதிர்ப்பார்ப்புமின்றி நானிருக்க அவளோ அடுத்த முப்பது
வருடத்தின் நொடிகளுக்கும் திட்டம் வைத்திருந்தாள். ஒரு
வாரத்திலயே தட்டு மாற்றி கொண்டோம்
அதன் பின் நீண்ட பின்னிரவு
பேச்சுகளிலெல்லாம் நிறைய
கதைகள் சொல்வாள். எனக்கு ‘ம்’ கொட்டுவதை
தவிர வேறு வேலையில்லை. எப்படி
இவளுக்கு இவ்வளவு விஷயங்கள் ஞாபகத்தில்
இருக்கிறது என்பது தான் மனதில்
ஓடி கொண்டிருக்கும். நானே அவ்வளவாக பேசாத
என் சொந்த காரங்களிடமும் பழகி
விட்டிருந்தாள். யாரேனும் அம்மாவிடம் பேசினால் “சுதா நல்ல இருக்காளா”
என்று கேட்க தவறியதில்லை.
ஒரு சுப யோக சுப
தினத்தில் எங்கள் திருமணமும் நடந்தது.
‘இவன் என் பிரிண்டு’ என
நான் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த அவளோ ‘இது எங்க
ஸ்கூல் கேங்’ ‘காலேஜ் கேங்’
‘ஆபீஸ் கேங்’ என்று ஒரு
கூட்டத்தையே அறிமுகப்படுத்தினாள். அதிலும் அவள் நெருங்கிய
நம்பர் குழாம் ஒன்று கல்யாணத்தில்
எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்து
கொண்டிருந்தது. கேட்பவர்களிடமெல்லாம் ‘பொண்ணோட பிரண்ட்சுக’ என்று
சொல்லி கொண்டிருந்தார் அப்பா.
திருமனத்திற்கு
பின் தான் என் வசந்த
காலம் ஆரம்பமாகியது. சுதா என்னை எதற்கும்
நிர்பந்தித்ததே இல்லை. என்
சுதந்திரத்தில் தலையிட்டதும் இல்லை.
“கேக்காம
செகண்ட் ஷோ புக் பன்னிட்டானுங்க
போட்டுமா”
“ம் இதுல என்னங்க இருக்கு
போய்ட்டு வாங்க”
“மூனாறுல காலேஜ்
ப்ரண்ட்ஸ் கெட் டு கெதர். போய்ட்டு
வரட்டுமா”
“சூப்பர்
ங்க என்ஜாய் பண்ணுங்க”
பின்னொரு
நாள் தோள் சாய்ந்து அவள்
கதை சொல்லி கொண்டிருக்கையில் தான்
சொன்னாள். “ நான் ஏன் தெரியுமாங்க
நிறைய பேசுறேன். சின்ன வயசுல இருந்தே
வீட்டுல தனியா வளந்தேன். எனக்கு
வர போறவரு நா பேசுறதெல்லாம்
பொறுமையா கேக்கணும்னு நெனச்சேன்
அது போலவே நீங்க கெடச்சுட்டீங்க”.
அத்தனை நாள் அவளை தனிமையில்
விட்டு சென்றதிற்கு என்னை வெட்கம் பிடுங்கி
தின்றது. வாட்சப் க்ரூப்பில் ஏதேனும்
கணவன் மனைவி ஜோக் வந்தால்
எல்லாரும் கை
தூக்கு வானுங்க. என் வாழ்வில் அதெல்லாம்
நடந்ததே இல்லை.
“இப்படி
எல்லாம் நடக்குமா சுதா”
“சும்மாங்க
காமெடிக்கு.. எல்லாருமே நல்லவங்க தான்”
அன்றொரு
நாள் அலுவலகத்திலிருந்து திரும்பிய பொழுது வீடே கம
கமகமத்தது. பின்னாலிருந்து
கட்டி அணைத்து "என்ன ஸ்பெஷல் பா"
என்றேன்.
“இன்னைக்கு
டாக்டர்ட்ட போனேங்க. மூணு மாசம். கன்பர்ம்
பண்ணாங்க “
“ஹே சொல்லவே இல்ல. “
“இல்லைங்க
உறுதி படுத்திட்டு சொல்லலாம் னு தான்”
அடுத்த
நாளே சுதா பேப்பர் போட்டு
விட்டாள். அவள்
மேனேஜர் வீடு வரை வந்து
எக்ஸ்ட்டெண்டெட் மெடெர்நிட்டி தருவதாய் சொல்லியும் மறுத்து விட்டாள். சுதாவுக்கு
யாருடைய ஆலோசனையும் தேவை படவில்லை. என்ன
சாப்பிட வேண்டும், என்ன வேலை செய்ய
வேண்டும் என்று எல்லாமே அவளுக்கு
தெரிந்திருந்தது. அவளின்
மசக்கையை பார்த்து எனக்கு தான் பதறியது.
“நீ வேனா ஊர்ல போய்
இரேன் சுதா நான் சமாளிச்சுக்குவேன்”
“அது சரி. ஆனா நீங்க
இல்லாம நா எப்படிங்க சமாளிக்க
முடியும்”
சில மாதங்கள் கழித்து வளைகாப்பு. இவங்களுக்கு
சொல்லாம விட கூடாதுன்னு நெனச்சு
ஊரையே அழைக்க வேண்டியதாயிற்று. நான்
கொடுத்து வைத்தவன் என்று சொல்லாதவரே இல்லை.
அத்தனை பேராலும் ஆசீர்வதிக்க பட்ட வாழ்வை வாழ்ந்து
கொண்டிருந்தேன். ஓரிரு
மாதங்களில் அந்த ரோஜா மொட்டை
என் கைகளில் ஏந்தியிருந்தேன். முன்னரே
முடிவெடுத்தது போல் மீரா என்று
பெயர் வைத்தோம். என் அம்மாவும் அத்தையும்
எங்களுடனே இருந்தனர்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு மாறிய வானிலையின்
காரணத்தால் மீராவுக்கு சளி பிடித்து கொண்டது.
முற்றி சுவாச பிரச்சனையும் சேர்ந்து
கொண்டது. மூன்று நாட்கள் ஹாஸ்ப்பிடலிலே
கிடந்தோம். துணி எடுத்து வர
வீட்டிற்கு சென்றிருந்தாள் சுதா. ஒரு பதட்டமான
சூழ்நிலை நிலவியது. டாக்டர் தயங்கி நிற்கையிலே
எனக்கு புரிந்து விட்டது. சுதா எப்படி தாங்கி
கொள்வாளோ என்பதை தாண்டி எனக்கு
வேறு எதுவும் தோன்றவில்லை. அவள்
திரும்பும் முன்னே நாங்கள் வீடடைந்திருந்தோம்.
ஆம்புலன்ஸ் சத்தத்திலே வெளியில் வந்து விட்டாள் சுதா.
ச்ட்ரெச்சரை இறக்கும் பொழுது அவள் கதறியது
தெரு முழுக்க கேட்டிருக்கும். பின்
யாராலும் அவளை தேற்றவே முடியவில்லை.
+++
நான் மெதுவாக அறையுனுள் நுழைந்தேன்.
அவள் அருகிலமர்ந்து தலையை தூக்கி என்
மடியில் வைத்து கொண்டேன். அவள்
உகுந்த கண்ணீரின் வெப்பம் மிகுதியாயிருந்தது.