Saturday, November 3, 2018

தடாகத்தை சுத்தம் செய்த மீன்


2011. முகப்புத்தகத்தில் உள்ள எண்ணற்றோர்களை போல நானும் 2G ஊழல், ஈழம் என்று memes பகிர்ந்து கொண்டிருந்தேன். தமிழக அரசியலில் வைகோவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததற்கு வருத்தம் இருந்தது. விஜயகாந்த் நல்லவர் அவரால் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற எண்ணம் இருந்தது. அருகே நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சை கேட்டு முறுக்கேறி போயிருந்தேன். ஆனால் இதெல்லாம் சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு வரை. தேர்தல் நெருங்க நெருங்க பார்க்கும் அனைவரும் குறிப்பாக ஊடகங்களும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று பிம்பம் ஏற்படுத்தி வைத்திருந்தனர். மக்களை நெருக்கும் அளவுக்கு அதிகாரத்தின் கரங்கள் நீண்டிருந்த அவ்வேளையில் அதிமுக ஆட்சிக்கு வருவதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அரசியல் இதழ்கள் தொடர்ந்து வாசித்து வந்ததனால் 91-96ஆட்சி பற்றி இருந்த அறிவு, 2001-2006 ஆட்சியிலும் ஜெ காட்டிய அடக்குமுறை, நாடாளுமன்ற தேர்தலில் 0 வாங்கியது, ஈழம் பற்றிய அவரது கருத்துக்கள் எல்லாம் ஜெயலலிதாவை ஆபத்பாந்தவராக காண மறுத்தது. ஒட்டு மொத்த தமிழகமும் அவரை நோக்கி நகர்ந்த அந்த வேளையில் தான் நான் திமுக பற்றியும் கலைஞரை பற்றியும் அறிந்து கொள்ள தொடங்கியிருந்தேன். பின் அடுத்த சில வருடங்களில் அது திராவிடம் சமூக நீதி பற்றிய புரிதலை நோக்கி நகர்ந்தது.

History will be kinder to me என்று மன்மோகன் சிங் சொன்னதாய் சொல்வார்கள். ஆனால் History should be kinder to him என்று நான் நினைப்பது கலைஞர் ஒருவருக்கு மட்டும் தான். கலைஞர் ஒன்றும் மனிதப்புனிதர் அல்ல. தற்கால அரசியல் சூழலில் அவரை மட்டும் அப்படி எதிர் பார்ப்பது சரியும் இல்லை. அவரிடம் குறை கூற ஏராளம் உண்டு. அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தமிழகத்திற்கு அவர் ஆற்றிய பணிகளை மறுத்து விட்டு அனைத்து இன்னல்களுக்கும் அவரையே குற்றம் சாட்டுவதை ஏற்று கொள்ள முடியாது. இந்த பதிவை கலைஞரின் மேல் உள்ள அவதூறுகளுக்கு பதில் சொல்ல எழுதவில்லை. அனைத்துக்குமான விளக்கம் இன்று பல தளங்களில் கிடைக்கிறது.

ஆட்சியில் இல்லாதிருக்கும்போது அவர் உடல் நலிவுற்றதில் பெரும் வருத்தம் இருந்தது. ஆனால் அவரின் அந்திம காலத்தில் தொடங்கிய திராவிடம் 2.0 விவாதங்கள், அவரின் மரணத்திற்கு தமிழகம் செலுத்திய அஞ்சலி, மரணத்திற்கு பின் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் செலுத்தும் புகழஞ்சலிகள் மிகுந்த மன நிறைவையே அளிக்கின்றன.

அவர் உடல் நலிவுற்றிருந்த போது அவர் ஹிந்து கடவுள்களை பழித்ததனால் தான் இழுத்து கொண்டு கிடப்பதாக சில பதிவுகள் காண நேர்ந்தது. என்னை கேட்டால் ஆத்திகர்கள் நடையாய் நடந்து கடவுளிடம் கேட்கும் வரங்களை கேட்காமலே பெற்றவர் அவர். தமிழத்தின் எந்த தலைவருக்கும் வாய்க்காத மிக சிறப்பான தனிப்பட்ட வாழ்வு அமையப்பெற்று ஆண்டு அனுபவித்து தான் போய் சேர்ந்தார். பொது வாழ்விலும் அவருக்கே track record அதிகம். எல்லோருக்கும் தெரிந்த 50 ஆண்டு சட்டமன்ற பணி போன்றவற்றை கடந்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்று project செய்யப்பட்ட இந்த கலைஞர் தான் சென்ற தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

தான் கல்லறையில் பொறிக்க வேண்டிய வாக்கியத்தையும் முடிவெடுத்து சென்றவர் அவர். அவர் வாழ்க்கையை விளக்க நாம் வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. அவரே குறிப்பிட்டதை போல அவர் தடாகத்தை சுத்தம் செய்த மீனாகவே வாழ்ந்து மரித்தார்.

Monday, April 9, 2018

Needle


1100 காலத்திலிருந்தே ரிங்க்டோன்கள் மேல் ஒரு அலாதி ஆர்வம் உண்டு. Music series வாங்கி விருப்பமான பாடல்களை ரிங்க்டோனாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே ஒரு பெருங்கனவாக இருந்தது. MP3 cutter download செய்து பாடல்களை வெட்டி ஒட்டி கொண்டிருப்பேன். இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போதெல்லாம் default ரிங்க்டோன் தான். ஆனால் ஒரு இரண்டு மாதங்களாக புதிதாக ஒரு இசை கோர்ப்பை ரிங்க்டோனாக வைத்துள்ளேன். அலாரம் டோனும் இது தான். பயணத்தின் போதும் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் அடிக்கடி இதை கேட்பதுண்டு. அது கேம் ஆப் த்ரோன்சில் இடம்பெற்ற Needle theme.


Needle ஒன்றும் கேம் ஆப் த்ரோன்சின் புகழ்பெற்ற இசைக்கோர்ப்பு அல்ல. இதை விட செர்சி செப்ட் ஆப் பேலரை கொளுத்தும் Light of seven மிகச்சிறந்த composition. ஆனால் Needle கேட்கும் பொழுது எழும் ஆர்யா ஸ்டார்க்கின் நினைவலைகள் தான் அதை தனித்துவமாக்குகிறது. 

கேம் ஆப் த்ரோன்சில் எத்தனையோ பிடித்தமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் ஆர்யா ஸ்டார்க் மேல் ஒரு தனி பிரியம் உண்டு. நூல் நூற்க விரும்பிய பெண்களுக்கு மத்தியில் வாளேந்த விரும்பியவள் அவள். "நீ ஒரு அரசனை மணந்து கொள்வாய்.. உன் பிள்ளைகள் நாடாள்வார்கள்" போன்ற ஆசீர்வாதங்களை அவள் அறவே வெறுத்தாள். தான் அவர்களுள் ஒருவளல்ல என்று அந்த இளம் வயதிலேயே அவளால் உணர முடிந்தது. ஆருயிர் தந்தையின் தலை வெட்டப்படுவதை காணும் துயரத்திற்கு சற்றும் குறைவில்லாதது அவர் தலை வெட்டிய சத்தத்தில் பறந்த பறவைகள் சிறகடிக்கும் சத்தம். அதை அனுபவித்தவள். பொதுவாக தங்கள் உயிருக்கு உயிரானவர்கள் மரிக்கும் பொழுது அதனால் நிர்மூலமாகும் தங்கள் வாழ்வை எண்ணி வருந்துவது தான் பெண்களின் வழக்கம். ஆனால் ஆர்யா அவள் தந்தை மரணத்திற்கு பழி வாங்க விரும்பி அவர்களை தன் கையால் கொல்ல சபதமேற்றவள். இளவரசியாக பிறந்திருந்தாலும் உருப்படியாக பயணித்து, கண்டம் விட்டு கண்டம் சென்று பார்வையிழந்து, பிச்சையெடுத்து திரிந்து இறுதியில் முகமற்ற மனிதர்களின் பெருங்கலையை கற்றவள்

அத்தனை இன்னல்களுக்கு இடையிலும் மனதில் ஏற்றிய வேள்வியிலிருந்து தழுவாது உற்றவர்களுக்காக போராடும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. 


Monday, February 12, 2018

கர்நாடக உணவுகள்

பெங்களூரு வந்து ஒரு வருடம் ஆகிறது. எந்த புது இடத்துக்கு போனாலும் "Places to eat in.." என்று Google செய்யாமல் செல்வதில்லை. இங்கு வந்த பிறகு தான் கர்நாடக உணவுகள் பற்றிய ஒரு அறிமுகமே கிடைத்தது. நெடு நாட்களாகவே  அதைப்பற்றி  எழுத நினைத்தாலும் சோம்பல் பட்டிருந்தேன். இன்று  ட்விட்டரில் யாரோ ஒருவர் கர்நாடக cusine பற்றி பேச உடனே எழுத தோன்றியது.



பெண்ணெ தோசா:


கர்நாடகத்தில் உள்ள தாவன்கெரே தான் பெண்ணெ தோசையின் பூர்விகம். இந்த பெயரிலேயே பெங்களூரு எங்கும் கடைகள் நிறைந்திருக்கும். நம் ஊர் ஹோட்டலில் தோசை என்பது முருகலாகவோ இல்லை கல் தோசை ஊத்தாப்பமாகவோ  தான் கிடைக்கும். வீட்டு தோசைக்கும் கல் தோசைக்கும் இடைப்பட்ட பதத்தில் மிருதுவாக இருப்பது தான் பெண்ணெ தோசா. மிருதுவாக இருப்பதற்கு அவல் சேர்க்கிறார்கள் என்று ரெசிபி பார்த்து தெரிந்து கொண்டேன். கூட உருளைக்கிழங்கு பல்யா. உருளையும் வெங்காயமும் சேர்த்த மஞ்சள் போடாத மசாலா தான். எனக்கு அந்த பல்யா மேல் பெரிதாக விருப்பம் இல்லை. அது இல்லாமல் இன்னும் கொஞ்சம் மாவு அதிகம் ஊற்றி தர முடியுமா என்றெல்லாம் கேட்க தோன்றியிருக்கிறது. தொட்டு கொள்ள "ராவா"ன தாளிக்காத தேங்காய் சட்னி. வெறும் தேங்காயை நைஸ் ஆக இல்லாமல் அதே நேரத்தில் சில்லு சில்லாகவும்  இல்லாமல் அரைப்பதன் சூட்சமம் புரியவில்லை. தனியாகவே அந்த சட்னியை வழித்து நக்கலாம். சரி இதற்க்கு ஏன் பெண்ணெ தோசா என்று பெயர். ஏனென்றால் நெய் எண்ணெய் தவிர்த்து வெறும் வெண்ணையை பயன்படுத்துவதால். திகட்டி விடமால் மிக சரியான அளவில் வெண்ணை சேர்ப்பதில் இருக்கிறது பெண்ணெதோசையின் சுவை. போதா குறைக்கு விறகு அடுப்பில் சமைக்கும் ஹோட்டலும் கிடைத்தால் சூடாக வாழையிலையில் வைக்கப்படும் பெண்ணெ தோசையை முகர்ந்து, உண்டு நேராக சொர்கத்துக்கே செல்லலாம்



தொன்னெ பிரியாணி:


வந்த புதிதில் யாருமே இதை பற்றி பாசிட்டிவாக சொல்லவில்லை. ஆனால் ஹைதராபாத் ஸ்டைல் தம் இல்லாமல் கறியோடு சேர்த்து சமைக்கப்படும் நம்ம ஊர் ஊண் சோறு பிரியர்களுக்கு தொன்னெ நிச்சயம் பிடிக்கும். பட்டை கிராம்பு போன்ற spices இல்லாமால் புதினா பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து அதே சீராக சம்பா மாதிரி உள்ள அரிசியில் சமைப்பது தான் தொன்னெ பிரியாணி ஸ்டைல். சிவாஜி மிலிட்டரி ஹோட்டலில் மதுரை அம்சவல்லி, திண்டுக்கல் வேணு பிரியாணிக்கு இணையாக மட்டன் பூவை போல் வெந்திருக்கும். தொட்டுக்கொள்ள சற்று தண்ணி அதிகம் உள்ள தயிர் பச்சடி. இங்கு அனைத்து இடங்களிலும் வெள்ளரியும் மறக்காமல் சேர்க்கிறார்கள். அமிர்தமே ஆனாலும் சமைக்கும் பக்குவத்தில் உள்ளது சுவை. வாங்கிய பிரியாணியை மொத்தமாக தூக்கி போடும் சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆதலால் உணவகம் அறிந்து உண்பீர்

நீர் தோசை:

கரண்டி இல்லாமல் கிட்டத்தட்ட ரவா தோசை போல் மாவை விசிறி அடித்து செய்வது தான் நீர் தோசை. மாவின் பக்குவத்திற்கு google search செய்யுங்கள்.  அம்மா வருடம் தவறாது கந்த சஷ்டி விரதமிருப்பார். கோவிலுக்கு போயிட்டு வந்து அர்ச்சனை செய்த தேங்காயை துருவி வெல்லம் சேர்த்து சாப்பிடுவார். அது தான் இங்கு சில இடங்களில் தொட்டு கொள்ள தருகிறார்கள். ஒரு லைட்டான இரவு உணவிற்கு நிச்சயம் நல்ல சாய்ஸ்.

தட்டே இட்லி:

ஓவலாக இருக்கும் இட்லியின் ஷேப்பையே மாற்றி தட்டு போல் இருப்பது தான் தட்டே இட்லி. இன்று தமிழ்நாட்டின் கல்யாண Buffetகளிலேயே கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் நார்மல் இட்லி அது அரிசி உளுந்து கலந்த மாவில் தான் செய்கிறார்களா என்று சந்தேகம் ஏற்படுத்தும். பெரும்பாலும் கல்லை போன்றோ நெருநெருவாகவும் இருக்கும். ஆனால் என்ன மாயமோ  பெரும்பாலான இடங்களில் தட்டே இட்லி மிருதுவாகவே இருந்திருக்கிறது. முப்பது ரூபாய்க்கு இரண்டு இட்லியில் வயிறு நிறைந்துவிடும். பிரச்னை வேக வைக்க பிளாஸ்டிக் போன்ற ஒரு வஸ்துவை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இட்லி வேக வைக்கும் துணிக்கே தனி மணம் உண்டு. அந்த plastic துணி தான் தட்டே இட்லி மேல் அச்சம் ஏற்படுத்துகிறது .

ராகி முத்தே: வாழ்நாளில் காசு கொடுத்து களி தின்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கர்நாடகாவில் எளிய மக்களின் உணவு ராகி முத்தே. உருண்டையான ராகி களி பெரும்பான்மையான ரோட்டு கடைகளில் கிடைக்கிறது. சூடான களியில் சிக்கன் குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிடுவதும் சுவையாகத் தான் இருக்கிறது. முகில் ராகி உணவுக்கும் கர்நாடகாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி உணவு சரித்திரம் புத்தகத்தில் எழுதியிருப்பார். ரசித்து ராகி களி உண்ணும் கன்னடர்களை கண்டால் கு.சிவராமன் ரொம்ப சந்தோஷப்படுவார் என்று நினைக்கிறேன்

ரவா இட்லி: ரவை உடன் தேங்காய் வறுத்த கடலை பருப்பும் சேர்த்து வேகவைக்கிறார்கள். இதன் அளவும் மூன்று இட்லிகளை சேர்த்ததாக இருக்கிறது

ஒரு முறை பொங்கல் ஆர்டர் செய்தேன். பொங்கல் மேல் தயிர் பச்சடி ஊற்றி தந்தார்கள். இதை எப்படிடாசாப்பிடுவது என்று யோசித்தே வாயில் வைத்தேன் அத்தனை மோசமில்லை.

அக்கி ரொட்டி தொடங்கி இன்னும் சரியாக பெயர் தெரியாத உத்தர கர்நாடக உணவுகள் நிறைய உண்டு. ஏனோ அக்கி ரொட்டி என்னை ஈர்க்கவில்லை அதனால் அதே வகையான பிற உணவுகளையும் இன்னும் ருசி பார்க்கவில்லை.

காலை உணவுக்கே சித்திரண்ணா (lemon rice) வாங்கிபாத் (Brinjal rice) பிசி பேலா பாத் கிடைக்கும். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் வெளுத்து கட்டலாம்.

மற்ற படி சற்றே உப்பிய தட்டையை போன்ற மத்தூர் வடையெல்லாம் என்னை போன்ற மொறு மொறு மசால் வடை பிரியர்கள் தவிர்த்து விடவும்.

இன்னும் நிறைய உணவுகள் விடுபட்டிருக்கலாம். சக ஹிருதயர்கள் கமெண்ட் செய்யவும்



Wednesday, November 15, 2017

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


திராவிட கட்சிகளில் ஊழல் உண்டு. சாதி பார்த்து தான் வேட்பாளர் நிறுத்துகிறார்கள். இந்த நாட்டுக்கு அவர்களால் இன்னும் எவ்வளவோ செய்திருக்க முடியும் என்பதில் எல்லாம் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்பதை எப்பொழுது கேட்டாலும் தீயாய் சுடும்.


திராவிட கொள்கைகளை புரிந்து கொள்வது பெரிய சூத்திரமில்லை. கொஞ்சம் common sense, மனிதாபிமானம், ஜனநாயகத்தில் நம்பிக்கை, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் உடன்பாடு இருந்தால் போதும். திமுக பல நேரங்களில் இவற்றின் தடம் மாறி சென்றிருக்கிறது. அனால் இன்றும் அதன் அடிப்படை அவை தான் என்றே நம்புகிறேன். இங்கு தான் அரசியலில் possibility என்பது வருகிறது. "ஊரே washing machineல போட்டது மாதிரி இருக்கு" என்று 'ஷங்கர்'த்தனமான புரிதல்களோடு இருப்பவர்களால் இதை உணர்ந்து கொள்ள முடியாது.



சரி.. திராவிட இயக்கங்களின் மேலுள்ள ஈடுபாடு வெறும் Emotional connectஆ? நிச்சயம் இல்லை. தரவுகளின் அடிப்படையிலே கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, மனித வளம் என்று எல்லா குறியீட்டுகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலங்களில் ஒன்று. ஒரே தேசம் என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பில் 1000km சொச்சம் தூரம் உள்ளவர்களால் முடியாத பொழுது, இது இந்த மண்ணின் மக்களின் சாதனை 5௦ ஆண்டு கால ஆண்ட கட்சிகளுக்கு சம்பந்தமில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம் அன்றி வேறென்ன? 



NewYork timesல் 'the land ruled by cine stars is one of the prosperous state in india' என்ற கட்டுரை, NEET பிரச்னையின்போது நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழகம் எப்படி சுகாதாரத்தில் சாதித்தது என்ற கட்டுரை என எல்லாம் சிதறி கிடந்தது. குஜராத் மாடல் என்று வட இந்திய ஊடகங்கள் முழங்கியபோது தமிழ்நாடு எந்த விதத்திலும் அதற்கு சளைத்ததல்ல என்று இங்குள்ள ஊடகங்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்தானாலும் மிக சரியான ஒரு தருணத்தில் பொதுத்தளத்தில் எளிய மக்களுக்கு சேரும் வண்ணம் தெற்கிலிருந்து ஒரு சூரியனை 'தி ஹிந்து' உருவாக்கியிருக்கிறது



இந்த கட்டுரைகள் யாவும் யாரோ முகம் தெரியாத ஒருவரால் வாட்சப்பிலோ முகநூலிலோ பதியப்பட்டவை அல்ல. தரவுகளின் அடிப்படையில் அந்தந்த துறையில் சமூகத்தால் அங்கீகரிக்க பட்டவர்களின் பதிவுகள். இவர்களில் பலரே இந்த இயக்கத்தை பல நேரங்களில் எதிர்த்தவர்கள் தான். 



தனிப்பட்ட அரசியல் பிம்பத்தின் மீது பிணைப்பு கொள்ள விரும்பாத எனக்கே சண்முகநாதன், இமயம் போன்றவர்களின் கட்டுரைகள் நெஞ்சை தொட்டது. 



ஒரு இயக்கத்தின் மீது பெருவாரியான மக்கள் ஈடுபாடு கொள்வதென்பது அவர்களால் அந்தந்த காலக்கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும். நாளை திராவிடத்தை ஒதுக்கி முழு தமிழ் தேசியமோ, தலித் இயக்கமோ ஏன் மதவாத இயக்கமோ தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் கடந்த காலத்தில் இந்த மண்ணிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்க மறப்பது அறமாகாது.

அந்த அங்கீகாரம் தான் "தெற்கிலிருந்து ஒரு சூரியன்"



சமஸ் மற்றும் 'தி ஹிந்து' குழுவினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

Friday, May 19, 2017

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் - காட்சி 3

"யோவ்.. மணி எட்ட தாண்டி அஞ்சு நிமிஷம் ஆச்சு.. இன்னும் உருட்டிக்கிட்டு கெடக்க.. எடுய்யா சீக்கிரம்.. நாங்கல்லாம் ஆளு ஏத்த வேணாமா"

அரசு பேருந்து கண்டக்டர் வண்டி முன் வந்து இரைந்தான்.

HMT டிரைவர் கண்டுகொள்ளவேயில்லை. பஸ் டயர் இன்ச் பை இன்ச் ஆக நகர்ந்துகொண்டிருந்தது.

"ஏன்னே.. இவ்வளவு கூட்டம் பத்தாதா.. வண்டிய எடுத்தா என்ன" என்று படியில் நின்றவாரே கண்டக்டரிடம் கேட்டான் பரிதி

"அட நீ வேற ஏன்பா.. நா எப்போவோ விசிலு குடுத்திட்டேன். அவரு தான் எடுக்கல. இதுக்கு மேல எதாவது சொன்ன அப்பறம் பேசிப்புடுவாரு"

"வர வேண்டியவங்க வந்தாச்சு அதெல்லாம் வண்டி இப்ப கெளம்பிடும்" என்றான் பரிதியுடனிருந்த சத்யா

"யாரு"

"அதோ" என்று அவன் கண் காட்டிய திசையில் ஒருவர் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவர் பின் அமர்ந்திருந்த பெண் வேகமாக இறங்கி பஸ்ஸின் முன் வாசல் வழியாக படியில் நின்றிருந்தவர்களை மீறி உள் நுழைந்தாள். அவளுக்காகவே காத்திருந்தது போல் பஸ் சீறி பாய்ந்தது

"யார்ரா இது "
"நம்ம காலேஜ் தான்.. BSC chemistry பாத்ததில்ல"
"இல்லையே பேரு"
"சுதா"

அரை மணி நேர பிரயாணம் முழுவதும் அவளையே பார்த்து கொண்டு வந்தான் பரிதி

"ஆர்ட்செல்லாம் எறங்குங்க"

மொத்த கூட்டமும் இறங்கி கல்லூரிக்குள் சென்று கொண்டிருந்தது 

Tuesday, April 4, 2017

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் - காட்சி 2

சில வருடங்களுக்கு முன்பு 

"ரொம்ப தேங்க்ஸ் சார்"

"பரவால்லப்பா. இந்த காலேஜ் நம்ம ஊருக்கு வர காரணமே உங்க அப்பா தான். அப்புறம் இதக்கூட நான் பண்ணலேன்னா எப்படி. என்ன நீ தான் பெரிய பெரிய இடத்தெல்லாம் விட்டுட்டு இங்கு வந்து படிக்க தேவையில்ல" 

"இல்ல சார். அவர் எனக்கு சின்ன வயசுலிருந்தே எல்லாத்தயும் பாத்து பாத்து செஞ்சார். இப்ப அவர இந்த நிலைமையில தனியா விட்டுட்டு நா போறது சரிவராது"

"ரொம்ப நல்ல மனசுப்பா உனக்கு"

தயாளன் கல்லூரி முதல்வருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஹாஸ்டல் வார்டன் உள்ளெ நுழைந்தார். 

"சார்.. பசங்க எல்லாம் போராட்டம் பண்றானுங்க"

"போராட்டமா எதுக்கு"

"ஹாஸ்டெல்ல சரியான வசதிகள் இல்லயாம். நீங்க வந்து பேசணுமாம்" 

"என்னயா அநியாயமா இருக்கு. இப்ப தான் வானத்திலேருந்து குதிச்சானுங்கலாமா. சரி வா போலாம்" 

தயாளனும் அவர்களுடன் நடந்தான். விடுதி முன்பு கூட்டமாக அமர்ந்திருந்தனர். அதிக பட்சம் நூறு பேர். பனியன் கைலி சகிதமாய் பெரும்பான்மையோர். தண்ணீர் சரியாய் வருவதில்லை, சாப்பாடு மோசம், பவர் கட் என்று ஏகப்பட்ட புகார்கள் சொல்லி கொண்டிருந்தனர். முதல்வர் கூடிய விரைவில் சரி செய்யப்படுமென்றும், இதற்காக குழு அமைக்க படுமென்றும் வாக்கு கொடுத்தார். பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓரத்தில் நின்ற ஒருவனின் கண் அசைவுக்கு ஏற்ப பேசுவதை தயாளன் கவனித்தான். அவன் சைகையில் முதல்வரின் பதிலுக்கு சரி என்று சொல்லவும் இவர்களும் ஒத்துக்கொண்டார்கள். கூட்டம் கலைந்து சென்றது. 

"சார்.. இதெல்லாம் அந்த பரிதி பயல் பண்ற வேலை சார்" என்றார் வார்டன்.

தயாளன் திரும்பி பார்த்தான். பரிதி கூட்டத்தோடு கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தான். 

Tuesday, March 21, 2017

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் - காட்சி 1

ஐப்பசி மாத மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது.

ஆபீஸிலிருந்து வெளியே வந்த தயாளன் வேகமாக ஓடி காரினுள் ஏறினான்.

"வீட்டுக்கு தானனே"

"ஆமா காளி"

கேட்டை விட்டு ரோட்டிற்க்கு வந்தது பொலிரோ. எதிர் வரும் எந்த வண்டியுமே தெரியவில்லை.

"மெதுவாவே போப்பா"

"சரி னே"

கார் மெயின் ரோட்டிலிருந்து இடதுபுறமாக தெருவில் இறங்கியது. பெய்த மழையினால் உருவான சகதியில் உருண்டு வந்த டயர் திடீர் பிரேக்கினில் நின்றது. பைல்களை மேய்ந்து கொண்டிருந்த தயாளன் நிமிர்ந்து பார்த்தான்.

"என்னாச்சுப்பா"

"தெரியலனே, மழ பேஞ்சதுல ஏதாச்சும் மரம் விழுந்துருக்கும். என்னனு பாக்குறேன்"

காளி காரை திறந்து இறங்கிய சில நொடிகளிலேயே ஆ என்ற அலறல் சத்தம் கேட்டது. வேகமாக பைல்களை நகர்த்தி விட்டு காரிலிருந்து இறங்கினான் தயாளன். இறங்கிய வேகத்தில் அவன் முதுகில் விழுந்தது ஒரு வெட்டு. சுதாரிப்பதற்குள் சரமாரியாக அவன் உடல் பதம்பார்க்கப்பட்டது.  ரத்த வெள்ளத்தில் சரிந்தான் தயாளன். அவன் குருதி மழை நீரோடு கலந்து ஓட ஆரம்பித்தது